Filed Under:  இந்தியா

அன்னா, ராம்தேவ் போராட்டங்களை சாடி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை

15th August 2012   ·   0 Comments

நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொற்றுநோய் போல் பரவினால் குழப்பமே ஏற்படும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது சுதந்திர தின உரையில் மறைமுகமாக அன்னா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் போன்றோரை சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுதந்திர தின உரை:
ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும் போராட்டம் நடத்துவதும் நியாயமானதுதான். இந்தப் போராட்டங்களின்போது சில சமயங்களில் மக்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுகின்றனர். இதற்காக ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஜனநாயக அமைப்புகள்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் தூண்களாக உள்ளன. இதில் கீறல் ஏற்படும் போது நமது அரசமைப்புக் கோட்பாட்டை நிலைநிறுத்த முடியாது. இந்த ஜனநாயக அமைப்புகளே மக்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையே பாலமாக இருக்கிறது.
நமது நாடாளுமன்ற அமைப்புகள்தான் ஜனநாயகத்தின் தூண்களாக இருந்து வருகின்றன. இவற்றின் செயல்பாட்டில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் விரிசல் ஏற்பட்டால் ஜனநாயக மரபுகளை கட்டிக்காக்க முடியாமல் போய்விடும். ஜனநாயக அமைப்புகள் நமது சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நாடாளுமன்றத்திடமிருந்து சட்டமியற்றும் அதிகாரத்தையும், நீதிமன்றங்களின் நீதி வழங்கும் அதிகாரத்தையும் யாரும் பறித்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் பெற்றவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட்டால், ஜனநாயகம் பாதிக்கப்படும்; அதேபோல, போராட்டங்கள் தொற்றுநோய்போல பரவினால் குழப்பம்தான் ஏற்படும். எவ்வாறிருந்தாலும், ஜனநாயகத்தின் தீர்ப்பு நாளாக அமைந்துள்ளது தேர்தல்தான்.
நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களின் ஆன்மா. இதன் உரிமைகளையும், கடமைகளையும் நாம் கேள்விக்குள்ளாக்குவது அபாயகரமானது. தேர்தல் நடைமுறைகள் மூலம் நமது குறைகளை தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை ஜனநாயகம் வழங்கியுள்ளது.
அறிவுத் தேடலில் உள்ள இளம் தலைமுறையினருக்கு, அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அது இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இந்திய பொருளாதாரம் தீர்க்கமான நிலையை அடைந்துவிட்டால், அதுவே அடுத்த நிலைக்கு வேகமாக கொண்டு செல்வதற்கான காரணியாக அமைந்துவிடும். இந்தியாவிலிருந்து வறுமை, நோய், பசிக்கொடுமையை அகற்றுவதற்கான இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் அவர்.

By

Readers Comments (0)





RECENT POSTS

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031