எல்ஐசி கிளைம் தொகை இனி வங்கி கணக்கில் வரும்!
16th January 2012 · 0 Comments
சென்னை:
நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பாலிசிதாரர்களுக்கு அளிக்கும் பணப் பயன்கள் அனைத்தையும் மின்னணு பரிவர்த்தனை (எலக்டிரானிக் டிரான்ஸ்பர்) முறைக்கு மாற்றவுள்ளது. இதன்மூலம், பாலிசிதாரரின் வங்கி கணக்கில் நேரடியாக தொகை வரவு வைக்கப்படும். ஒரு வங்கிக் கணக்கில் இருந்து எந்த வங்கியில் உள்ள மற்றொரு கணக்கில் உடனடியாக பணப் பரிமாற்றம் செய்யும் முறையை தேசிய மின்னணு பண பரிவர்த்தனை (நெப்ட்) என்கின்றனர். இதை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.
பாலிசிதாரர்களின் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் இருந்தால் மட்டுமே நெப்ட் முறையில் பண பரிமாற்றம் செய்ய முடியும். இந்த முறையில் மட்டுமே இனி பணப் பயன்களை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. எனவே, பாலிசிதாரரின் வங்கி கணக்கு எந்த இடத்தில் இருந்தாலும் பணம் பெறுவதற்கான தேதியன்றே நெப்ட் முறையில் வரவு வைக்கப்படும். இதற்காக எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையிருக்காது.
எல்ஐசி நடத்தும் நெப்ட் வழி பரிமாற்றம் ஒவ்வொன்றுக்கும் தனி அடையாள எண் (யுடிஆர்) வழங்கப்படும். ஒருவேளை பாலிசிதாரர் அல்லது பயனாளியின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதில் பிரச்னை ஏற்பட்டால் இந்த யுடிஆர் எண் மூலமாக உடனடியாக தீர்க்க முடியும் என்று எல்ஐசி செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
* நெப்ட் முறைக்கான விண்ணப்பத்தை எல்ஐசி அலுவலகங்களில் பெறலாம். பூர்த்தி செய்து எல்ஐசி கிளைகள் அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்களில் கொடுக்க வேண்டும்.
* விண்ணப்பத்துடன் கேன்சல் செய்த காசோலை ஒன்று அல்லது வங்கி சேமிப்பு கணக்கு எண் உட்பட விவரங்கள் அடங்கிய பாஸ்புக் முதல் பக்க நகலை இணைக்க வேண்டும்.
By suriyantv

